மேற்குவங்காள முதல்-மந்திரியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இரவு முழுவதும் தங்கி இருந்த நபர்...!


மேற்குவங்காள முதல்-மந்திரியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இரவு முழுவதும் தங்கி இருந்த நபர்...!
x
தினத்தந்தி 3 July 2022 9:35 PM GMT (Updated: 3 July 2022 9:36 PM GMT)

மேற்குவங்காள முதல்-மந்திரியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் அங்கு ஒருநாள் இரவு முழுவதும் தங்கி இருந்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் தனிப்பட்ட வீடு தெற்கு கொல்கத்தாவின் கலிகட் பகுதியில் 34பி ஹரிஸ்சடர்ஜி என்ற முகவரியில் உள்ளது. இந்த வீட்டிற்கு பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்-மந்திரி மம்தாவின் வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஒரு நபர் நுழைந்துள்ளார். அந்த நபர் வீட்டின் ஒரு பகுதியில் இரவு முழுக்க பதுங்கி இருந்துள்ளார்.

காலை வழக்கம்போல போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வீட்டிற்குள் ஒரு நபர் அத்துமீறி நுழைந்திருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு அந்த நபர் சரிவர பதில் அளிக்கவில்லை என்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் தங்கி இருந்த இடம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்-மந்திரியின் வீட்டிற்குள் நுழைய அந்த நபரை யாரேனும் வற்புறுத்தினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story