நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நாளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நாளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்
x
தினத்தந்தி 3 Sep 2023 7:00 PM GMT (Updated: 3 Sep 2023 7:00 PM GMT)

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில்தான் முடிந்திருக்கும் நிலையில், மீண்டும் சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்த 5 நாள் தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டத்தொடரை முன்னிட்டு இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்து உள்ளார். இந்த கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் உள்ள கார்கேயின் இல்லத்தில் நடக்கிறது.

எம்.பி.க்களுடன் ஆலோசனை

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய வியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு இதுவரை வெளியிடாத நிலையில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் மசோதாக்களுக்கு ஆற்ற வேண்டிய எதிர்வினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல இந்த கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் கார்கே விவாதிப்பார் என கூறப்படுகிறது.

இணைந்து குரல்

பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணியாக எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக பல பிரச்சினைகளில் பா.ஜனதாவுக்கு எதிராக இந்த கட்சிகள் இணைந்தே குரல் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத்தொடரிலும் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இணைந்தே இந்த கட்சிகள் இரு அவைகளிலும் எழுப்பி இருந்தன.

இதன் தொடர்ச்சியாக வருகிற சிறப்பு கூட்டத்தொடரிலும் அனைத்து விவகாரங்களிலும் இணைந்தே குரல் கொடுக்க திட்டமிட்டு வரும் நிலையில், இந்த கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Next Story