டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: சோனியா,ராகுல்காந்தி பங்கேற்பு


டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: சோனியா,ராகுல்காந்தி பங்கேற்பு
x

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் அதானி குழும முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 13-ம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், அந்நிய மண்ணில் இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல் காந்தி அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், கடந்த 13, 14, 15, 16 -ம் தேதிகளில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின.

இந்தநிலையில், 5-வது நாள் அலுவலுக்காக இன்று காலையில் நாடாளுமன்றம் கூடியது. மக்களவை கேள்வி நேரத்துடன் இன்றைய தனது அலுவலைத் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழங்கள் எழுப்பத் தொடங்கினர். பல உறுப்பினர்கள் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் சபையில் ஆடியோ துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சபாநாயாகர் ஓம் பிர்லா உறுப்பினர்களிடம் அவை இயங்க அனுமதிக்குமாறு வலுயுறுத்தினார். ஆனாலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழுக்கங்களை எழுப்பியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், இன்றைய அலுவல்களுக்காக மாநிலங்களவை காலையில் கூடியது. அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், கன்னட நடிகரும், எம்பியுமான ஜக்கேஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். மாநிலங்களவையிலும் அவை உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களையில் எந்த நடவடிக்கைகளும் நடைபெறவில்லை. எனவே வரும் திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அதானி விவகாரம் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக பார்லிமென்ட் வளாகம் முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, அக்கட்சி எம்.பி., ராகுல்காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story