2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை


2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை
x
தினத்தந்தி 17 Oct 2022 6:45 PM GMT (Updated: 17 Oct 2022 6:46 PM GMT)

ஹலகூர் அருகே 2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஹலகூரு:

மண்டியா மாவட்டம் ஹலகூருவை அடுத்த நந்திபூர் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் இரைத்தேடி வரும் சிறுத்தை, புலிகள் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. மேலும் ஆடு, மாடுகளையும் வேட்டையாடிவிட்டு செல்கின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நந்திபூர் கிராமத்தை சேர்ந்த தொட்ட பச்சேகவுடா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை சிறுத்தைகள் வேட்டையாடிவிட்டு சென்றன. இவர் வழக்கமாக தனது ஆடுகளை பசவனபெட்டா வனப்பகுதியில் மேயவிடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மேய்ச்சலுக்காக ஆடுகளை விட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்த சிறுத்தை ஒன்று, 2 ஆடுகளை அடித்து கொன்று மாமிசத்தை தின்றுவிட்டு சென்றுள்ளது. இதுபற்றி அறிந்த அவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள், வனத்துறையினரிடம் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story