கட்சியினருக்கு ஐ.ஜ.த. தலைவர் பிரியாணி விருந்து... 100 நாய்கள் மாயம் என பா.ஜ.க. குற்றச்சாட்டு; பீகாரில் பரபரப்பு


கட்சியினருக்கு ஐ.ஜ.த. தலைவர் பிரியாணி விருந்து... 100 நாய்கள் மாயம் என பா.ஜ.க. குற்றச்சாட்டு; பீகாரில் பரபரப்பு
x

பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட நாய்கள் மாயம் என பா.ஜ.க. தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பாட்னா,

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் பீகார் மாநில தலைவராக லல்லன் சிங் என்பவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், முங்கர் நகரில் தனது கட்சி தொண்டர்களுக்கு அவர் பிரியாணி விருந்து வைத்து அசத்தி உள்ளார். ஆனால், பா.ஜ.க. தலைவரான விஜய் குமார் சின்ஹா திடீரென அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

அவர், இந்த விவகாரம் மிக தீவிரம் வாய்ந்தது. நகரில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நாய்கள் காணாமல் போயுள்ளன என மக்களில் பலர் என்னிடம் வந்து தெரிவித்தனர்.

பிரியாணியில் இறைச்சி மற்றும் அரிசிக்கு பதிலாக, நூற்றுக்கணக்கான விலங்குகளை கட்சி தொண்டர்கள் சாப்பிட்டு உள்ளனர். இது விசாரணைக்குரிய விவகாரம். இதில் என்ன நோயெல்லாம் பரவுமோ தெரியவில்லை.

இந்த விருந்து நிகழ்ச்சியில் மதுபானம் பரிமாறப்பட்டு உள்ளதா? இல்லையா? என கூட தெரியவில்லை. இதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


Next Story