ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் கைது


ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2024 12:02 PM GMT (Updated: 22 Sep 2024 12:19 PM GMT)

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை பாஜக யுவமோச்சா பிரிவினர் முற்றுகையிட்டனர்.

அமராவதி,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "தனது ஆட்சியின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, திருப்பதி லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு இழுத்து விட்டுள்ளார் என்றும், திருமலை திருப்பதி தேவஸ்தான விவகாரங்களில் அரசு ஓர் அளவுக்கு மேல் தலையிட இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை பாஜக யுவமோச்சா பிரிவினர் முற்றுகையிட்டனர். விஜயவாடா அருகே தாடேபள்ளியிலுள்ள ஜெகன்மோகன் வீட்டை திடீரென்று பாஜக யுவமோட்சா பிரிவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெகன்மோகனின் சித்தப்பாவும் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவருமான சுப்பா ரெட்டி ஆகியோருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினரை போலீசார் கைதுசெய்தனர்.


Next Story