'அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல, நமது முன்னோர்கள்தான்' - ம.பி. கல்வி மந்திரி பேச்சு


அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல, நமது முன்னோர்கள்தான் - ம.பி. கல்வி மந்திரி பேச்சு
x

அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்று மத்திய பிரதேச மந்திரி இந்தர் சிங் பர்மர் கூறியுள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அந்த மாநிலத்தின் கல்வி மந்திரி இந்தர் சிங் பர்மர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை. நமது முன்னோர்கள்தான் கண்டுபிடித்தார்கள். 8-ம் நூற்றாண்டில் ஒரு இந்திய மாலுமி அமெரிக்காவிற்குச் சென்று சான் டியாகோவில் பல கோவில்களைக் கட்டினார். அவை இன்னும் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதை நம் மாணவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.

குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் 5,500 ஆண்டுகள் பழமையான இரண்டு பெரிய மைதானங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் விளையாட்டைப் பற்றி விரிவாக அறிந்திருந்தனர். அதற்காக பெரிய மைதானங்களைக் கட்டியுள்ளனர்.

ராமர் சிலைகளை உருவாக்கிய பால் பாகு என்ற இந்திய கட்டிடக் கலைஞரின் உதவியுடன் பெய்ஜிங் நகரம் வடிவமைக்கப்பட்டது. ரிக்வேதத்தை எழுதியவர்கள்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று முதலில் கணித்தார்கள். திட்டமிட்டு இந்தியாவின் பலத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறார்கள்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story