ஓடும் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற சம்பவத்தில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பா? - கைதானவரிடம் தீவிர விசாரணை


ஓடும் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற சம்பவத்தில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பா? - கைதானவரிடம் தீவிர விசாரணை
x

கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பேர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்கு கடந்த 2-ந் தேதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. எலத்தூர் அருகே சென்றபோது, டி-1 பெட்டியில் இருந்த மர்ம நபர் திடீரென சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும், கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை போலீசார் தேடி வந்த நிலையில், பெட்டியில் கிடந்த அந்த நபரின் உடமைகளை கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டு இருந்தன. அதில் இருந்த செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர். இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் ஷபி என்ற வாலிபர் பற்றிய தகவல் கிடைத்தது.

இதற்கிடையில் தீ வைத்த நபரின் உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் அவரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் நகரில் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர். அப்போது ஷாரூக் ஷபி என்ற நபர், ஒரு தச்சு தொழிலாளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து காசியாபாத் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை விடுவித்தனர். இதற்கிடையே இந்த சம்பவத்திற்கும், மாவோயிஸ்டு பயங்கரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் கேரள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. எனவே அவர்கள் இது பற்றி மத்திய உளவு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் மத்திய உளவு துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு பிரிவினரும் கோழிக்கோடு சென்று விசாரணை நடத்தினர். குறிப்பாக கோழிக்கோட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 3 பயணிகள் எரித்து கொல்லப்பட்ட ரெயில் பெட்டியில் ஆய்வு நடத்தினர். மேலும் அந்த பகுதி முழுவதும் சோதனையும் மேற்கொண்டனர். இதில் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய விவகாரம் தொடர்பாக பல முக்கிய ஆதாரங்களை திரட்டினர்.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறும்போது, இந்தியாவின் போபாலில் கடந்த 2017-ம் ஆண்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பை நடத்தினர். இதுதான் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய முதல் நாசவேலை ஆகும். அப்போது அவர்கள் போபாலில் இருந்து கேரளாவின் கோழிக்கோடுக்கு வந்துள்ளனர்.

அதுபோல இப்போதும் கேரள ரெயிலில் பெட்ரோல் ஊற்றி பயணிகளை எரித்த நபருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தனர். எனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள உளவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தினர்.

மேலும் இது தொடர்பாக மராட்டிய மாநிலத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு அதிரடிப்படையினரும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது நேற்று அதிகாலை 3 மணியளவில் மராட்டியத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு, உடலில் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக ஒரு நபர் வந்தார்.

அவர், அங்கிருந்த பயங்கரவாத தடுப்பு அதிரடிப்படையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை அதிரடிப்படையினர் துரத்தி பிடித்தனர். அப்போது அவர், கேரள போலீசார் தேடிய நபர் என்பதும், அவரது பெயரும் ஷாருக் ஷபி என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த அதிரடிப்படையினர் இந்த தகவலை கேரள போலீசாருக்கு தெரிவித்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story