எரகோல் அணை திட்ட முறைகேடு குறித்து விசாரணை- முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு


எரகோல் அணை திட்ட முறைகேடு குறித்து விசாரணை- முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு
x

எரகோல் அணை திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:-

எரகோல் அணைகட்டும் திட்டம்

கோலார் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு பங்காருபேட்டை தாலுகா யதகோல் கிராமத்தில் எரகோல் அணைகட்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சி

களின் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமி எரகோல் அணைகட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்திற்காக ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. அதாவது கடந்த 2008-ம் ஆண்டு ரூ.160 கோடியை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. தற்போது எரகோல் அணைகட்டும் திட்டத்திற்காக ரூ.239 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த தொகை முழுவதும் விடுவிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது கூடுதலாக ரூ.79 கோடி விடுவிக்கப்பட்டு இருந்தது.

எம்.எல்.ஏ. புகார்

அணைகட்டுக்கு தண்ணீர் கொண்டு வருதல், குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதலாக ரூ.79 கோடி விடுவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எரகோல் அணைகட்டும் திட்டத்திற்காக ரூ.160 கோடிக்கு பதில் ரூ.239 கோடி விடுவிக்கப்பட்டு இருப்பதன் மூலம் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன் எரகோல் அணைகட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுபற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பங்காருபேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ்.நாராயணசாமி, முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து புகார் அளித்திருந்தார். அதனை பெற்றுக் கொண்ட சித்தராமையா உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

விசாரணைக்கு உத்தரவு

இந்த நிலையில், எரகோல் அணைகட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர்ப்பாசனம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்திவிட்டு, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.

எரகோல் அணைகட்டும் திட்டத்தால் கோலார் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். தற்போது அந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story