பாலஸ்தீன மக்களுக்கு 2-வது தொகுதி உதவிப் பொருட்களை அனுப்பிய இந்தியா


பாலஸ்தீன மக்களுக்கு 2-வது தொகுதி உதவிப் பொருட்களை அனுப்பிய இந்தியா
x

இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்கள் ரெட் கிரஸண்ட் அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா,

கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி, பாலஸ்தீனத்தின் காசா முனையில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை அடியோடு ஒழித்து கட்டுவோம் என சூளுரையுடன் காசா மீது தாக்குதல் தொடுத்துள்ளது.

காசா மீது தரைவழியாகவும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போரால் காசாவில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகினர். இஸ்ரேலில் 1,200 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

காசா நகரை சுற்றி வளைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், காசாவில் மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் மக்கள் அல்லல்படும் சூழல் உள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசா முற்றிலும் நிலைகுலைந்து இருக்கிறது.

இந்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்காக இந்திய அரசு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வருகிறது. முன்னதாக மருந்துகள், குடில்கள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள், தார்ப்பாய்கள் உள்பட மொத்தம் 38 டன் எடை கொண்ட உதவிப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை இந்தியா அனுப்பியிருந்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா அனுப்பிய 32 டன் எடை கொண்ட 2-வது தொகுதி உதவிப் பொருட்கள் தற்போது எகிப்து சென்றடைந்துள்ளன. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி வெளியிட்டுள்ள பதிவில், "பாலஸ்தீன மக்களுக்காக இந்தியா அனுப்பிய மனிதாபிமான உதவிப் பொருட்கள் எகிப்து சென்று சேர்ந்துள்ளன. அங்குள்ள ரெட் கிரஸண்ட் அமைப்பினரிடம் இந்த உதவிப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story