சிக்கமகளூருவில் கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தை


சிக்கமகளூருவில்  கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தை
x
தினத்தந்தி 14 July 2023 6:45 PM GMT (Updated: 14 July 2023 6:46 PM GMT)

சிக்கமகளூருவில் கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

சிறுத்தை அட்டகாசம்

சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா கௌடனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கௌடனஹள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. அவ்வாறு வரும் சிறுத்தை கிராமத்தில் உள்ள ஆடு, மாடு, நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது. மேலும் விளைநிலங்களில் புகுந்து தொழிலாளர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இதனால் கிராமமக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். மேலும் அவர்கள் வேலைக்கு செல்வதற்கும் அச்சத்்தில் இருந்து வருகிறார்கள். சிறுத்தை புகுவதை தடுக்க கௌடனஹள்ளி கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை சுற்றிலும் கம்பிவேலி அமைத்துள்ளனர். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் அதிகாலை இரைதேடி சிறுத்தை கௌடனஹள்ளி கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் புகுந்தது.

மயக்க ஊசி செலுத்தி

அப்போது விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் சிறுத்தை சிக்கியது. இதில் இருந்து வெளியே வரமுடியாமல் சிறுத்தை தவித்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் சிறுத்ைதயை அங்கிருந்து வனத்துறையினர் கூண்டில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கம்பிவேலியில் சிக்கியது 4 வயது ஆண் சிறுத்தை என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story