சட்டவிரோத சுரங்க வழக்கு: ஜார்க்கண்ட் முதல் மந்திரியின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 பறிமுதல்


சட்டவிரோத சுரங்க வழக்கு: ஜார்க்கண்ட் முதல் மந்திரியின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 பறிமுதல்
x

Image courtesy: ANI

தினத்தந்தி 24 Aug 2022 9:57 AM GMT (Updated: 24 Aug 2022 10:18 AM GMT)

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டில் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மீது சட்டவிரோத பண பரிமாற்ற விசாரணையை அமலாக்கத்துறை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு அங்கமாக, அமலாக்கத்துறை கடந்த ஜீலை 8-ந் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் 18 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் பெர்ஹைட், ராஜ்மகால் ஆகிய நகரங்களில், பங்கஜ் மிஸ்ரா உள்பட சிலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சுமார் 13.32 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து பங்கஜ் மிஸ்ராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பங்கஜ் மிஸ்ரா அளித்த தகவலின் அடிப்படையில் ஜார்கண்ட், பீகார், தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 20 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றன. ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவரின் வீட்டில் இருந்து இரண்டு ஏ.கே. 47 துப்பாக்கி, 60 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story