ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் ஆவலில் உள்ளேன்; பிரதமர் மோடி


ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் ஆவலில் உள்ளேன்; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Jun 2022 11:48 AM GMT (Updated: 25 Jun 2022 11:53 AM GMT)

ஜெர்மனியில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசும் ஆவலில் உள்ளேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.



புதுடெல்லி,



48வது ஜி7 மாநாடு ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் எல்மாவ் நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று பிரதமர் மோடி இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதன்படி, பிரதமர் மோடி ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் வரும் 26ந்தேதி முதல் 28ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச இருக்கிறார்.

இதுபற்றி பிரதமர் மோடி இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், 48வது ஜி7 மாநாடு ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் எல்மாவ் நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அதனை ஏற்று ஜெர்மனி செல்கிறேன். இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான பயனுள்ள அரசாங்க ஆலோசனைகளுக்கு பின் ஸ்கால்சை சந்திப்பதில் மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

ஜெர்மனியில் ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசும் ஆவலில் உள்ளேன். ஐரோப்பிய நாடுகளுடனான நமது உறவை மேம்படுத்தும் மற்றும் அந்நாடுகளின் பொருளாதாரத்திற்காக பங்காற்றும் அவர்களுடன் கலந்துரையாட ஆர்வமுடன் உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

கடந்த மே 2ந்தேதி பிரதமர் மோடி முதன்முறையாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் என்ற அடிப்படையில் ஜெர்மனிக்கு சென்று, ஸ்கால்சை சந்தித்து பேசினார் என்பது கவனிக்கத்தக்கது.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, வருகிற 28ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு சென்று, அதன் தலைவர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹியானை சந்தித்து பேசுகிறேன்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அபுதாபியின் முன்னாள் ஆட்சியாளரான மறைந்த ஷேக் கலீபா பின் சையத் அல் நஹியானின் மறைவுக்கு எனது தனிப்பட்ட இரங்கல்களை அவரிடம் தெரிவிப்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.


Next Story