"தமிழக மீனவர்களை மீட்க எவ்வளவு நாட்கள் ஆகும்?" - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


தமிழக மீனவர்களை மீட்க எவ்வளவு நாட்கள் ஆகும்? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 30 Sep 2022 7:20 AM GMT (Updated: 30 Sep 2022 7:27 AM GMT)

இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க எவ்வளவு நாட்கள் ஆகும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி கே.கே. ரமேஷ் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நட்ராஜ், இந்த ரிட் மனு தெளிவாக இல்லை. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்க கூடுதல் அவகாசம் தேவை என வாதிட்டார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான சி.ஆர். ஜெய சுகின், மீனவர்கள் இன்னும் மீட்கபடாமல் இருப்பது கவலையளிக்கிறது என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க எவ்வளவு நாட்கள் ஆகும் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.


Next Story