அரியானாவில் இந்து அமைப்பு யாத்திரை; 24 மணி நேரத்திற்கு இணைய சேவை தடை


அரியானாவில் இந்து அமைப்பு யாத்திரை; 24 மணி நேரத்திற்கு இணைய சேவை தடை
x

அரியானாவில் இந்து அமைப்பினரின் யாத்திரையை முன்னிட்டு 24 மணி நேரத்திற்கு இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர்,

அரியானா மாநிலம் நூஹ் பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடைபெற்ற யாத்திரையின்போது இருதரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் கலவரமாக மாறிய நிலையில், குருகிராமில் உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைந்து அங்கிருந்த இமாமை கலவரக்காரர்கள் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு மனோகர் லால் தலைமையிலான அப்போதைய மாநில பா.ஜ.க. அரசின் மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு இந்து அமைப்பினரின் யாத்திரையை முன்னிட்டு அரியானாவின் நூஹ் பகுதியில் 24 மணி நேரத்திற்கு இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று(ஞாயிறு) மாலை 6 மணியில் இருந்து நாளை(திங்கள்கிழமை) மாலை 6 மணி வரை இணைய சேவை தடை செய்யப்படும் என தடை செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story