சிக்கமகளூருவில் கனமழை


சிக்கமகளூருவில் கனமழை
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:47 PM GMT)

சிக்கமகளூருவில் கனமழை பெய்தது.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கியது. ஆனால் ஜூன் மாதத்தில் போதிய மழை பெய்யவில்லை. கடந்த ஜூலை மாதம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை இல்லாமல், வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மழை இல்லாமல் காபி செடிகள் வாடும் நிலையில் இருந்தது. இந்தநிலையில் சிக்கமகளூரு, கொப்பா டவுன் பகுதி மற்றும் ஜெயப்புரா சுற்றுவட்டாரங்களில் நேற்று முன்தினம் மாலை திடீரென 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் சில இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. கடந்த 10 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சிக்கமகளூருவில் நேற்றுமுன்தினம் மழை பெய்ததால் வெயில் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இந்த மழையால் பொதுமக்கள், காபி தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Next Story