நடக்க முடியாவிட்டாலும் கோலூன்றி சென்று மக்களுக்காக பாடுபடுவேன்


நடக்க முடியாவிட்டாலும் கோலூன்றி சென்று  மக்களுக்காக பாடுபடுவேன்
x

நடக்க முடியாவிட்டாலும் கோலூன்றி சென்று மக்களுக்காக பாடுபடுவேன் என்று சொந்த ஊரில் நடந்த தனது பிறந்த நாள் விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கீழ்சிவிரி கிராமத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 84-வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. சொந்த ஊரில் நடைபெற்ற இ்ந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு அவரது வயதை குறிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்ட 84 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக அவருக்கு கிராம மக்கள் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து டாக்டர் ராமதாஸ் தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டிற்கு சென்றார். அங்கு அவரின் பெற்றோர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மக்களுக்காக பாடுபடுவேன்

பின்னர் கீழ்சிவிரி கிராமத்தில் அமைக்கப்பட்ட விழா மேடைக்கு சென்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

என் வாழ்நாளில் லட்சக்கணக்கான வரவேற்பை பார்த்துள்ளேன். ஆனால் எனது ஊரில் வரவேற்போடு எனது மக்களோடு இன்று நான் இருக்கிறேன். இதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்குள்ள மாரியம்மன் கோவிலில் தான் எனது நண்பர்களுடன் பம்பரம், கில்லி, கோலி, ஓடி பிடித்து விளையாடி இருக்கிறேன். விடிய, விடிய தெருக்கூத்து பார்த்த ஞாபகங்கள் வருகிறது.

83 ஆண்டுகள் முடிந்து 84-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இங்கு குளம் வெட்டி இருக்கிறார்கள். என்னுடைய கண்ணீர் முழுவதும் அந்த குளத்தில் கலக்கிறது. இன்னும் எத்தனை வயதானாலும், நடக்க முடியாவிட்டாலும் கோலூன்றி சென்று மக்களுக்காக பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்களுக்கு இனிப்பு

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. விழாவில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை தலைவர்கள் கருணாநிதி, சங்கர், மாநில தலைமை செயலாளர் இசக்கி படையாட்சி, தேர்தல் பணி செயலாளர் செல்வகுமார், மயிலம் தொகுதி சிவக்குமார் எம்.எல்.ஏ., மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுப்பராயலு, ராஜி, மாநில சட்டப் பாதுகாப்பு செயலாளர் வக்கீல் பாலாஜி, மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட துணை செயலாளர் பால்பாண்டியன், ரமேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட தலைவர் பாவாடைராயன், ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன், பூதேரி ரவி, நகர செயலாளர் ராஜேஷ் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story