காங்கிரஸ் தலைவர் 'ரிமோட் கண்ட்ரோல்ட்' ஆகப் போவதில்லை - ராகுல் காந்தி


காங்கிரஸ் தலைவர் ரிமோட் கண்ட்ரோல்ட் ஆகப் போவதில்லை - ராகுல் காந்தி
x

கோப்புப்படம்

காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போட்டியிடுகின்றனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், காந்தி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ரிமோட் கண்ட்ரோலாக இருப்பார் என பாஜனதா விமர்சித்து வருகிறது

ஒருபுறம் இந்திய ஒற்றுமை யாத்திரை என்று ராகுல் காந்தி பயணப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் கட்சித் தலைவர் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக்கப்பட்டால் அவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் தலைவராகவே இருப்பார் என்ற விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்குமே தனித்தனி தகுதி உள்ளது. இருவருக்கும் வெவ்வேறு பார்வை உள்ளது. இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவரை நீங்கள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்குபவர் என்று அழைத்தாலும், அது இருவருக்குமே இழிவுதான். காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும்.

நாங்கள் பாசிச கட்சி அல்ல. நாங்கள் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்கள். வெவ்வேறு கருத்துகளையும் வரவேற்கும் தன்மை கொண்டவர்கள். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி முழுமையும் ஒரே குழுவாக செயல்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். பாஜக இந்த தேசத்தை பிரித்து வெறுப்பை பரப்புகிறது. இது எப்போதும் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவாது. அதனால்தான் நான் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளேன். என்னோடு சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளனர்." என்று அவர் தெரிவித்தார்.


Next Story