கண்டக்டருக்கு ஓய்வூதியம் அளிக்கும் விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு


கண்டக்டருக்கு ஓய்வூதியம் அளிக்கும் விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
x

ஓய்வுபெற்ற கண்டக்டருக்கு ஓய்வூதியம் அளிக்கும் விவகாரத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து கோர்ட்டு நேரத்தை வீணடித்ததாக கூறி தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்த வேணுகோபால் என்பவர் கடந்த 1995-ம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை காட்டி அவருக்கு ஓய்வூதியம் வழங்க போக்குவரத்துத்துறை மறுத்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, தொழிலாளர் ஆணையம் தொடங்கி சுப்ரீம் கோர்டு வரை சென்று ஓய்வூதிய உரிமையை பெற்றார்.

அதே சமயம் இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தன. ஆனால் 2 கோர்ட்டுகளும் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளூபடி செய்தன.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்தநிலையில் தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, "இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்காக தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது" என அந்த அமர்வு உத்தரவிட்டது.


Next Story