ஹிஜாப் தடையை அமல்படுத்தக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்


ஹிஜாப் தடையை அமல்படுத்தக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
x

ஹிஜாப் அணிய தடைவிதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை அமல்படுத்தக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது.

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை கர்நாடகாவில் சில பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் பின்பற்றவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவின் மங்களூரு பல்கலைக்கழக கல்லூரியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய மாநில அரசு, கோர்ட்டு தடைவிதித்துள்ளபோதும் அந்த உத்தரவை மங்களூரு பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகம் அமல்படுத்தவில்லை.

இதையடுத்து, ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள உத்தரவை அமல்படுத்தாததை கண்டித்தும், ஹிஜாப் தடை உத்தரவை உடனடியாக கல்லூரி நிர்வாகம் அமல்படுத்தக்கோரியும் மங்களூரு பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க... ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை-கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு


Next Story