எல்லையில் சீனா தொடர் ஊடுருவல்; மத்திய அரசு அமைதி காக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு


எல்லையில் சீனா தொடர் ஊடுருவல்; மத்திய அரசு அமைதி காக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:49 PM GMT (Updated: 4 Dec 2022 12:58 PM GMT)

அசல் எல்லை கோட்டு பகுதியில் சீனாவின் தொடர் ஊடுருவலை கண்டும் காணாமல் மத்திய அரசு அமைதியாக உள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது.

புதுடெல்லி,


டெல்லியில் 24 அக்பர் சாலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டு குழு கூட்டம் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று நடந்தது.

இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அசல் எல்லை கோட்டு பகுதியில் தொடர்ந்து சீனா படைகள் மற்றும் ஆயுதங்களை குவித்து வருகிறது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதும், சீனாவின் தொடர் ஊடுருவலை பற்றி கவனத்தில் கொள்ளாமல், மத்திய அரசு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளது.

இந்த சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளபோது, பிரதமர் தொடர்ந்து அதனை மறுத்தும், திசை திருப்பியும் மற்றும் மக்களை பிரிக்கும் வேலையிலும் ஈடுபடுகிறார் என்றும் தெரிவித்து உள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் சீனா மற்றும் இந்தியாவின் படை வீரர்கள் மோதி கொண்டதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன வீரர்களும் உயிரிழந்தனர்.

இதன்பின்பு, எல்லை பகுதியில் இருந்து சீனா மற்றும் இந்தியாவின் படைகள் வாபஸ் பெறப்பட்டன. அதற்காக தளபதிகள் மட்டத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் மேற்கொண்டன. எனினும், சீனா எல்லை பகுதியில் தொடர்ந்து வீரர்களை குவித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது.


Next Story