சந்திரயான்-3; இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலை நிகழ்ச்சி தொடங்கியது


சந்திரயான்-3; இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலை நிகழ்ச்சி தொடங்கியது
x
தினத்தந்தி 23 Aug 2023 12:17 PM GMT (Updated: 23 Aug 2023 12:48 PM GMT)

நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

பெங்களூரு,

பூமியின் துணைக் கோளான நிலவு (சந்திரன்) பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, இந்தியா முன்னணியில் இருக்கிறது.

இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

தற்போது, நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில், தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டது.

பூமிக்கும், நிலவுக்கும் இடையேயுள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தூரத்தை 40 நாட்கள் பயணித்து கடக்கும் திட்டத்துடன் புறப்பட்ட சந்திரயான்-3, முதலில் புவி வட்டப்பாதையில் பல்வேறு நிலைகளில் சுற்றிவந்து, பிறகு நிலவு நோக்கி பயணித்து, அதன் வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது.

நிலவு வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கருவி வெளியே கொண்டுவரப்பட்டு, அதே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே நிலவை நெருங்கி செல்கிறது. நிலவை தொட்டுவிடும் தூரத்தில் லேண்டர் கருவி சுற்றி வருகிறது.

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் சரியாக, இன்று மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு தரை இறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் முன்பே தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் அதிசய நிகழ்வை காண நாடு முழுவதும் மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. விண்வெளியில் சாதனை படைக்கும் இந்தியாவின் முயற்சியின் முக்கிய பகுதியாக, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு அமையும்.


Next Story