சந்திரயான்-3 விண்கலம் நிலவை நெருங்கி வருகிறது - இஸ்ரோ தகவல்


சந்திரயான்-3 விண்கலம் நிலவை நெருங்கி வருகிறது - இஸ்ரோ தகவல்
x

நான்காவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது.

ஏற்கனவே மூன்று கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நான்காவது முறையாக இன்று சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது. நான்காவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

சந்திரயான்-3 விண்கலம் நிலவை நெருங்கி வருகிறது.சந்திரயான்-3 விண்கலத்தின் 4வது சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வெற்றியடைந்து உள்ளது. அடுத்து 5வது சுற்றுப்பாதை உயர்த்தும் பணி ஜூலை 25ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story