புவி சுற்றுவட்டப்பாதை பயணத்தை நிறைவு செய்து நிலவை நெருங்கும் சந்திரயான்-3


புவி சுற்றுவட்டப்பாதை பயணத்தை நிறைவு செய்து நிலவை நெருங்கும் சந்திரயான்-3
x

சந்திரயான்-3 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதை பயணத்தை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பின்னர், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத்தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த சந்திரயான் -3 விண்கலம் இன்று நிலவின் சுற்றுப்பாதை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. நள்ளிரவு 12.05 மணியில் இருந்து 1 மணி இடையேயான காலத்தில் நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் - 3 தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவை நோக்கிய பயணத்தின் அடுத்தகட்டமாக வரும் 5-ம் தேதி சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Next Story