வளர்ப்பு நாயுடன் சண்டையிட்டதால் பக்கத்துவீட்டுக்காரர் தத்தெடுத்த தெருநாய் மீது கொடூர தாக்குதல்; சகோதரர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு


வளர்ப்பு நாயுடன் சண்டையிட்டதால் பக்கத்துவீட்டுக்காரர் தத்தெடுத்த தெருநாய் மீது கொடூர தாக்குதல்; சகோதரர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு
x
தினத்தந்தி 6 Oct 2022 6:45 PM GMT (Updated: 6 Oct 2022 6:46 PM GMT)

வளர்ப்பு நாயுடன் சண்டையிட்டதால் பக்கத்துவீட்டுக்காரர் தத்தெடுத்த தெருநாய் மீது கொடூர தாக்குதல் நடத்திய சகோதரர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே பட்டரஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் கடிகப்பா (வயது 53). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தெருநாயை தத்தெடுத்தார். அந்த தெருநாய்க்கு அச்சு என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடிகப்பாவின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நாகராஜ் என்பவர் வளர்த்து வரும் நாயும், கடிகப்பாவின் வளர்த்து வந்த நாயும் சண்டை போட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக நாகராஜ், கடிகப்பா இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடிகப்பாவின் வீட்டிற்குள் புகுந்த நாகராஜின் மகன்கள் ரஞ்சித், ராகுல், ரஜத் ஆகியோர் நாய் அச்சுவை கம்பால் தாக்கியதுடன், நாயின் கண் இமைகளை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனை தடுத்த கடிகப்பாவையும் 3 பேர் தாக்கி உள்ளனர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த நாய் அச்சு, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. தாக்குதல் சம்பவம் குறித்த புகாரின்பேரில் கே.ஆர்.புரம் போலீசார் 3 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story