'அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறை வெற்றி பெறும்' - பிரதமர் மோடி


அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறை வெற்றி பெறும் - பிரதமர் மோடி
x

Image Courtesy : ANI

அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறை வெற்றி பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரியானா மாநிலம் குருஷேத்திரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைவதற்குள் சுமார் 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமத்துவமான முறையில் வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் அரசியல், நாட்டில் பொய்யையும், அராஜகத்தையும் பரப்பும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. பொய்களை பேசுவதில் அவர்களுக்கு அவமானம் இல்லை. காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாசல பிரதேசத்தில் யாரும் இன்று மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில், அங்கு மாநில அரசு பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை நிர்வகிக்க தவறிவிட்டது.

அரியானாவின் முதல்-மந்திரி நயாப் சிங் சயினி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். முதலீடுகள் மற்றும் வருவாய் அடிப்படையில் அரியானா முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மத்தியில் 3-வது முறை ஆட்சி செய்வதற்கு மக்கள் வாய்ப்பு வழங்கினார்கள். அதே போல், அரியானாவிலும் பா.ஜ.க. 3-வது முறை வெற்றி பெறும்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story