சதீஸ் ஜார்கிகோளி விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்வதை பற்றி கவலைப்படவில்லை; டி.கே.சிவக்குமார் பேட்டி


சதீஸ் ஜார்கிகோளி விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்வதை பற்றி கவலைப்படவில்லை; டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2022 6:45 PM GMT (Updated: 9 Nov 2022 6:47 PM GMT)

சதீஸ் ஜார்கிகோளி விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்வதை பற்றி கவலைப்படவில்லை என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி (நாளை) பெங்களூரு வருகிறார். அவர் பங்கேற்கும் விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துவர இந்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. நல்ல திட்டங்களை கொடுத்திருந்தால் பிரதமர் விழாவுக்கு மக்கள் தாமாகவே வந்திருப்பார்கள். கல்வி தொடர்பான விழா நடைபெறாதபோது, எதற்காக மாணவர்களை அழைத்து வர வேண்டும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் மனதை மாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாக இருக்கலாம். இது பா.ஜனதாவின் சதித்திட்டம்.

எங்கள் கட்சியின் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி இந்து மதம் குறித்த தனது கருத்தை கூறியுள்ளார். அது காங்கிரசின் கருத்து அல்ல. இதுகுறித்து நாங்கள் எங்களின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். ஏதோ புத்தகத்தில் இருந்த கருத்துகளை கூறியதாக சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ளார். நான் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. இந்த விவகாரத்தை பா.ஜனதா தனது அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் பயன்படுத்தி கொள்ளட்டும். அதை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story