பா.ஜனதாவினர் ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர் - டி.கே.சிவக்குமார் பேச்சு


பா.ஜனதாவினர் ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர் - டி.கே.சிவக்குமார் பேச்சு
x

பா.ஜனதாவினர் ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ராகுல் காந்தி வடகர்நாடகத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது, மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பல்லாரியில் பிரமாண்டமான அளவில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பா.ஜனதா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களின் உணர்வுகளை முன்வைத்து பா.ஜனதா அரசியல் செய்கிறது. காங்கிரஸ் கட்சி மக்களின் வாழ்க்கை குறித்து சிந்தித்து செயல்படுகிறது.

பா.ஜனதாவினர் ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். எந்தெந்த ரவுடிகளுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பது தற்போது பகிரங்கமாகி வருகிறது. இது பா.ஜனதாவின் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது. எங்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்று பிற கட்சியினர் வந்தால் அவர்களை ஏற்று கொள்வோம். கட்சியில் புதியவர்களை சேர்க்க ஒரு குழு உள்ளது. அந்த குழுவின் அனுமதி கிடைத்தால் மட்டுமே புதியவர்களை கட்சியில் சேர்ப்போம். எங்கள் கட்சியில் தலைவர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

அரசியல் என்பது தேங்கிய நீர் அல்ல. அது ஓடிக்கொண்டே இருக்கும் நீர் போன்றது. அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல. பா.ஜனதாவில் தான் கருத்து வேறுபாடு உள்ளது. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். சித்தராமையா, தான் போட்டியிடும் தொகுதியை கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று கூறியுள்ளார். இதுவே கட்சியின் கட்டுப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story