பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தில் சிறுமி; தூங்கி கொண்டிருக்கிறார் பிரியங் கனூங்கோ: காங்கிரஸ் சாடல்


பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தில் சிறுமி; தூங்கி கொண்டிருக்கிறார் பிரியங் கனூங்கோ: காங்கிரஸ் சாடல்
x

பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தில் சிறுமியை பயன்படுத்தும் சூழலில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தூங்கி கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.



புதுடெல்லி,


தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவராக இருந்து வருபவர் பிரியங் கனூங்கோ. இவர சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் உள்ள அனாதை இல்லங்கள் மற்றும் கிறிஸ்தவ மிசனெரிகளால் நடத்தப்படும் குழந்தைகளின் காப்பகம் ஆகியவற்றிற்கு திடீர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

அவருடன் மத்திய பிரதேச மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் உறுப்பினர் ஓம்கார் சிங் மக்ராம் மற்றும் உயரதிகாரிகள் பலர் சென்றுள்ளனர்.

இந்த ஆய்வில், கிறிஸ்தவ மிசனெரிகளால் நடத்தப்படும் குழந்தைகளின் காப்பகத்தில் மதமாற்றம் நடந்து உள்ளது என கனூங்கோ குற்றச்சாட்டு கூறினார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள புகாரின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மிசனெரியின் 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோன்று, மத்திய பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் காப்பகம் ஒன்றிற்கு, சென்ற பிரியங் கனூங்கோ ஆய்வில் ஈடுபட்டார்.

இதன்பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இந்த ஆய்வில் காப்பகத்தில் உள்ள 3 குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் கூட மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரிய வந்து உள்ளது.

அவர்களின் பெயரில் புதிய ஆவணங்கள் மற்றும் மதநம்பிக்கைகள் உருவாக்கப்பட்டு இருந்தன. காப்பகத்தினை நடத்தி வருபவர், யாரோ சிலருக்காக இதனை செய்துள்ளார் என பதிவிட்டார்.

இதேபோன்று, ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் இளம்பெண்களை விலைக்கு வாங்கி, விற்கும் அவலம் பற்றி தெரிய வந்து அதற்கான விசாரணைக்கும் அவர் சென்றுள்ளார்.

அந்த இளம்பெண்கள் கட்டாயத்தின்பேரில் விபசாரத்தில் தள்ளப்பட்ட குற்றச்சாட்டும் உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

இதன்படி, அந்த கிராமத்தில் இருந்த 27 இளம்பெண்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது என அவர் கூறியுள்ளார். 2019-ம் ஆண்டு இந்த கிராமத்தில் பெரிய அளவில், கும்பலாக பெண்களை விபசாரத்திற்கு விற்கும் அவலங்கள் நடந்தது தெரிய வந்துள்ளது என்றும் பிரியங் டுவிட்டரில் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

இதுபோன்று மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என பல பகுதிகளுக்கு பல்வேறு தருணங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், குஜராத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.

இதில், பிரதமர் மோடி, சிறுமி ஒருவரை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார் என காங்கிரஸ் குற்றச்சாட்டு எழுப்பியது. தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.

இதேபோன்று, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடி தங்களது தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு சிறுமியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அதுபற்றி கவனம் கொள்ளாமல் பிரியங் கனூங்கோ தூங்கி கொண்டிருக்கிறார் என தெரிவித்து உள்ளார்.


Next Story