பாஜகவில் 4 மாநில தலைவர்கள் மாற்றம் - ஜே.பி.நட்டா உத்தரவு


பாஜகவில் 4 மாநில தலைவர்கள் மாற்றம் - ஜே.பி.நட்டா உத்தரவு
x

பாஜகவில் 4 மாநில தலைவர்களை மாற்றம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜே.பி.நட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

4 மாநில தலைவர்கள் விவரம்:-

பாஜகவின் டெல்லி மாநில தலைவராக வீரேந்திர சச்தேவாவை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நியமித்துள்ளார். சச்தேவா தற்போது டெல்லி பாஜக செயல் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

பீகார் மாநில பாஜக தலைவராக இருந்த சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சாம்ராட் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.பி சிபி ஜோஷிக்கு, ராஜஸ்தான் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் ஆம்பர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சதீஷ் பூனியாவுக்குப் பதிலாக ஜோஷி மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் ஒடிசா மாநில தலைவராக முன்னாள் மாநில அமைச்சரான மன்மோகன் சமல் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.


Next Story