பசு மாடு கடத்தியதாக 2 பேர் காரோடு எரித்துக்கொலை - 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் கைது


பசு மாடு கடத்தியதாக 2 பேர் காரோடு எரித்துக்கொலை - 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் கைது
x

கடந்த பிப்ரவரி மாதம் பசு மாடு கடத்தியதாக 2 பேர் காரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஹட்மிகா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜுனைத் (வயது 39), நசீர் (வயது 25). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 பேரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அதிகாலை தங்கள் பொலிரோ காரில் ராஜஸ்தான்-அரியானா எல்லை கிராமத்தில் உள்ள ஜுனைத்தின் உறவினரை சந்திக்க சென்றுள்ளனர்.

அப்போது, அரியானாவை சேர்ந்த பசு பாதுகாப்பு கும்பல் ஜுனைத்தும், நசீரும் காரில் பசு மாட்டை கடத்தியதாக கருதி அவர்களை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். அரியானாவின் பெரோஷ்பூர் ஹிர்கா பகுதியை சேர்ந்த ரின்கு சைனி என்ற டாக்சி டிரைவர் முதலில் ஜுனைத், நசீர் பயணித்த காரை பின் தொடர்ந்துள்ளார். பசு பாதுகாவலர்கள் அமைப்பை சேர்ந்த இவர் பின்னர் பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த மொனு மனீசர் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் தங்கள் குழுவினருடன் இணைந்து ஜூனைத், நசீரின் காரை இடைமறித்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர், ஜூனைத் மற்றும் நசீரை காருடன் கடத்தி சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டுபேரையும் உயிருடன் காருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

அரியானாவின் பர்வாஸ் கிராமத்தில் காட்டுப்பகுதியில் கார் தீக்கிரையான நிலையிலும், அதனுள் 2 பேர் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடப்பது குறித்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், 2 பேரை உயிருடன் எரித்து கொன்றதில் தொடர்புடையதாக டாக்சி டிரைவர் ரிங்கு சைனி உள்பட சிலரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொனு ரானா மற்றும் மொனு ஆகிய 2 பேர் தலைமறைவாகினர். இந்த குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பசு கடத்தியதாக 2 பேரை காரோடு எரித்துக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மொனு ரானா மற்றும் மொனுவை ராஜஸ்தான் போலீசார் இன்று கைது செய்தனர்.

2 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் உத்தரகாண்ட்டில் பதுங்கி இருந்த போது ராஜஸ்தான் போலீசார் இன்று கைது செய்தனர்.


Next Story