ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைப்பு: பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு


ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைப்பு: பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு
x

கோப்புப்படம்

மேற்கு வங்காளத்துக்கான ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டதால், பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி உள்ளார். இந்த சூழலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் மற்றும் கிராமின் ஆவாஸ் யோஜனா ஆகிய நலத்திட்டகளுக்காக மேற்கு வங்காளத்துக்கு வழங்க வேண்டிய ரூ.15,000 கோடி நிலுவைத் தொகையை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறுத்தி வைத்துள்ளதாக மம்தாவின் அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்பவுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் அநீதிக்கு எதிராக மேற்கு வங்கம் ஒன்றுபட்டு நிற்கிறது. வங்காள மக்கள் அநீதிக்கு எதிராக தங்கள் குரலை உயர்த்துகிறார்கள். அந்த வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் பணிபுரிந்த பிறகும் இன்னும் தங்கள் நிலுவை தொகையை பெறாதவர்கள், அதை வழங்கக்கோரி கடிதம் எழுதியுள்ளனர். இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை சேகரித்துள்ளோம். இந்த கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் ஆகியோரின் அலுவலகங்களுக்கு அனுப்பவுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.


Next Story