மேற்கு வங்காளம்: மாடுகளை திருடியதாக கூறி வங்கதேச நபர் அடித்துக்கொலை - 3 பேர் கைது


மேற்கு வங்காளம்: மாடுகளை திருடியதாக கூறி வங்கதேச நபர் அடித்துக்கொலை - 3 பேர் கைது
x

மேற்கு வங்காளத்தில் மாடுகளை திருட முயன்றதாக கூறி வங்கதேச நபரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டம் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கும் கால்நடைகள் அடிக்கடி திருடு போய் உள்ளது.

இந்த நிலையில், ராஜ்கஞ்ச், பருவா பாராவில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கும் மாடுகளை திருடுவதற்காக வங்கதேசத்தை சேர்ந்த சிலர் நேற்று இரவு வந்துள்ளனர். உஷார் நிலையில் இருந்த கிராம மக்கள் மாடு திருட வந்தவர்களை துரத்தி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த திருட்டு கும்பல் அங்கிருந்து தப்பி வங்கதேச எல்லைக்குள் ஒடி சென்றனர். அவர்களில் ஒருவன் வங்கதேச எல்லைக்குள் செல்லாமல் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் ஒடி மறைந்து கொண்டான்.

திருடன் ஒருவன் தேயிலை தோட்டத்திற்குள் ஒளிந்திருப்பதை அறிந்த கிராம மக்கள் இரவு முழுவதும் அந்த பகுதியில் காத்திருந்தனர். பின் காலையில் அந்த திருடனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story