அசாம்: சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது


அசாம்:  சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது
x

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகளை அசாம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



கோல்பாரா,



அசாமில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என கிடைத்த தகவலை தொடர்ந்து, மோரிகாவன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், கடந்த ஜூலை 28-ந்தேதி 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு வங்காளதேச நாட்டை அடிப்படையாக கொண்டு இயங்க கூடிய பயங்கரவாத அமைப்பான அன்சாருல்லா வங்காள குழு (ஏ.பி.டி.) மற்றும் அல்-கொய்தாவின் இந்திய துணை கண்டம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அவர்களில் முஸ்தபா என்பவர் உள்பட 8 பேர் பார்பேட்டா கோர்ட்டில் அடுத்த நாள் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 9 நாட்கள் போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து விசாரணையில், முஸ்தபா நடத்தி வரும் மதரசாவானது, சட்டவிரோத செயல்களை நடத்துவதற்காக நிதியுதவி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அந்த மதரசாவுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

இதுதவிர, ஆயுத தளவாடங்கள் மற்றும் பயங்கரவாத உறுப்பினர்களுக்கு புகலிடம் வழங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதன் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அல்-கொய்தாவின் இந்திய துணை கண்டம் பயங்கரவாத அமைப்புடன் மற்றும் அன்சாருல்லா வங்காள குழு (ஏ.பி.டி.) ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய 2 பயங்கரவாதிகள், கோல்பாரா மாவட்டத்தில் வைத்து அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story