திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை தாக்கிய சிறுத்தை சிக்கியது.!


திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை தாக்கிய சிறுத்தை சிக்கியது.!
x

வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் நேற்று நள்ளிரவில் சிறுத்தை சிக்கியது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்றுமுன் தினம் இரவு கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர். அப்போது திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.

இதனால் செய்வதறியாமல் திகைத்த சிறுவனின் பெற்றோர், போலீசார் மற்றும் பக்தர்கள் தங்கள் செல்போன்களில் டார்ச் அடித்தபடி வனப்பகுதிக்குள் தேடிச்சென்றனர்.

அப்போது சிறுவனின் அழுகுரல் கேட்டது. சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள புதர் அருகே சிறுவன் ரத்த காயத்துடன் கதறி அழுதுகொண்டிருந்தான். உடனடியாக அங்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவன் தற்போது நலமுடன் உள்ள நிலையில், சிறுத்தை தப்பி சென்ற பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வனப்பகுதியில் இரண்டு இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில், வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் நேற்று நள்ளிரவில் சிறுத்தை சிக்கியது.

பிடிபட்ட சிறுத்தையை வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் விடுவதா அல்லது வனப்பகுதியில் விடுவதா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.


Next Story