தோசை கரண்டியால் மகளை துடிக்க, துடிக்க அடித்த கொடூர தாய்; வீடியோ எடுத்த தந்தை


தோசை கரண்டியால் மகளை துடிக்க, துடிக்க அடித்த கொடூர தாய்; வீடியோ எடுத்த தந்தை
x
தினத்தந்தி 16 May 2024 2:11 PM GMT (Updated: 16 May 2024 2:35 PM GMT)

சிறுமியை கடுமையாக தாக்கிய கொடூர தாயையும், அதனை தடுக்காமல் படம் பிடித்து கொண்டிருந்த தந்தையையும் இணையதள பயனாளர்கள் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

வதோதரா,

குஜராத்தில் தாய் ஒருவர் வீட்டில் தன்னுடைய மகளை தோசை வார்க்க பயன்படுத்தும் கரண்டியை கொண்டு கொடூர முறையில் அடித்து, தாக்குகிறார். இதனால், வலி பொறுக்க முடியாமல் 9 வயதுடைய அந்த சிறுமி அலறி துடித்தபோதும், தொடர்ந்து விடாமல் அந்த பெண் சத்தம் போட்டபடியே தாக்குகிறார்.

சிறுமியை தரையில் தள்ளி, கழுத்து பகுதியை அழுத்தி பிடித்து கொண்டு நெரிக்கவும் செய்கிறார். இதனால், அந்த சிறுமியால் சத்தம் போட கூட முடியாமல் போனது. இதனை மறுபுறத்தில் இருந்து சிறுமியின் தந்தை அவரிடம் இருந்த மொபைல் போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார் என கூறப்படுகிறது.

இதன்பின்பு, சிறுமியை அந்த கொடூர தாய், தரதரவென இழுத்து கொண்டு பக்கத்து அறைக்குள் செல்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சிறுமியை கடுமையாக தாக்கிய அந்த கொடூர தாயையும், அதனை தடுக்காமல் படம் பிடித்து கொண்டிருந்த தந்தையையும் இணையதள பயனாளர்கள் கடுமையாக விமர்சித்து உள்ளனர். அவர்கள் இருவருக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

வீடியோவில், அந்த தாய் குஜராத்தியில் பேசுவது தெரிந்தது. அதனால், கட்ச் நகரில் இருந்து வீடியோ வந்திருக்க கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், குஜராத்தின் கட்ச் நகரில் மாதப்பார் கிராமத்தில் சம்பவம் நடந்தது தெரிய வந்தது.

அந்த சிறுமி தெரியாமல், வீட்டில் எண்ணெய்யை கொட்டி இருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த தாய் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார். கணவர் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் கணவரும், அந்த பெண்ணும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சிறுமி, அந்த பெண்ணுடன் ஜெய்ப்பூர் நகரில் ஒன்றாக வசித்து வருகிறாள்.

இந்த விசயத்தில், பெண்ணின் முன்னாள் கணவர் முதலில் அமைதியாக இருந்திருக்கிறார். வீடியோ வைரலானதும், முன்னாள் கணவர் போலீசுக்கு சென்றிருக்கிறார். இதுபற்றி புகாரும் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story