ராகுல்காந்தி பாதயாத்திரையில் கேஜிஎப்-2 பாடல் சர்ச்சை: டுவிட்டர் நிறுவனத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவு


ராகுல்காந்தி பாதயாத்திரையில் கேஜிஎப்-2 பாடல் சர்ச்சை: டுவிட்டர் நிறுவனத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Nov 2022 4:02 PM GMT (Updated: 7 Nov 2022 4:10 PM GMT)

கேஜிஎப்-2 பாடல் சர்ச்சை விவகாரத்தில் காங். கட்சி மற்றும் 'பாரத் ஜோடோ' யாத்திரை ஆகிய டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்குமாறு பெங்களூரு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கினார்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்த மாதம் 23-ந் தேதி தெலுங்கானாவை அடைந்தார்.

ராகுல்காந்தியின் 60-வது நாள் பாதயாத்திரை நேற்று நடந்தது. தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் அல்லதுர்க் என்ற இடத்தில் இருந்து காலையில் நடைபயணம் தொடங்கியது. நேற்றைய பாதயாத்திரை காமாரெட்டி மாவட்டத்தில் முடிவடைந்தது. இன்றுடன் தெலுங்கானாவில் பாதயாத்திரை முடிந்து, மராட்டிய மாநிலத்துக்குள் நுழைகிறது.

அதையொட்டி, காமாரெட்டி மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்.

இந்தநிலையில், இந்த யாத்திரையின் போது கேஜிஎப்- 2 படப்பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி வீடியோவாக தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது. இது தொடர்பாக எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் தங்கள் அனுமதியின்றி பாடப்பாடலை பயன்படுத்தியதாக ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ், உள்ளிட்டோர் மீது அளித்த புகாரில், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் 403 565, 120 ஆகிய பிரிவுகளின் கீழும், 1957 ம் ஆண்டு

காப்புரிமை சட்டம் 63ன் கீழும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா ஐகோர்ட்டில் இன்று நடந்த விசாரணையில், காங். கட்சி, பாரத் ஜோடோ யாத்திரை ஆகிய இரு டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

'பாரத் ஜோடோ' யாத்திரையின் போது கேஜிஎப்-2 படப்பாடலை, அனுமதியின்றி பயன்படுத்தியதாக ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது தொடர்ந்த வழக்கில் காங். கட்சி மற்றும் பாராத் ஜோடோ யாத்திரை ஆகிய டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


Next Story