குஜராத்தில் கார் மோதி பக்தர்கள் 6 பேர் பலி- முதல் மந்திரி இழப்பீடு அறிவிப்பு


குஜராத்தில் கார் மோதி பக்தர்கள் 6 பேர் பலி- முதல் மந்திரி இழப்பீடு அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Sep 2022 8:26 AM GMT (Updated: 2 Sep 2022 9:10 AM GMT)

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அரவல்லி மாவட்ட கலெக்டருக்கு முதல் மந்திரி உத்தரவிட்டார்.

குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தில் இன்று அம்பாஜி கோயில் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஏழு பக்தர்களும், அவர்கள் மீது மோதிய காரின் ஓட்டுநரும் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற அம்பாஜி கோவில் அமைந்துள்ள பனஸ்கந்தா மாவட்டத்தை ஒட்டிய அரவல்லியை இணைக்கும் சாலையில் இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்தது. பக்தர்கள் பஞ்சமஹால் மாவட்டத்தின் கலோல் தாலுகாவை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குஜராத் மாநில முதல் மந்திரி பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அரவல்லி மாவட்ட கலெக்டருக்கு முதல் மந்திரி உத்தரவிட்டார்.


Next Story