காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் - வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு


காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் - வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பிச்சென்ற நிலையில் அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் தேரா கி கலி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு நேற்று மாலை ராணுவ வீரர்கள் வேன் மற்றும் ஜீப்பில் சென்றனர்.

தேரா கி கலி அருகே தாத்யார் மோர் என்ற பகுதியில் உள்ள வளைவான சாலையில் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த கோர தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த கூடுதல் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்த வீரர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். இதனால், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பிச்சென்ற நிலையில் அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story