காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி


காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி
x

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்புப்படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும், பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story