நாளை மதியம் 2.15 மணிக்கு அரியானா முதல்வராக பதவியேற்கிறார் மனோகர் லால் கட்டார்
அரியானா முதல்வராக நாளை பிற்பகல் பதவியேற்க உள்ளேன் என்று மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
சண்டிகார்,
அரியானாவில் கடந்த 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 இடங்களில் ஆளும் பாஜக 40 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டது.
இதனால், சுயேட்சைகள் 7 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி திடீரென்று, பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்க முன்வந்தது.
இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி மனோகர் லால் கட்டார் இன்று கவர்னரை சந்தித்தார். கவர்னரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கட்டார் கூறுகையில், “ நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியதை கவர்னர் ஏற்றுக்கொண்டு எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனது ராஜினாமாவை நான் அளித்து விட்டேன். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2.15 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும். துஷ்யந்த் சவுதாலா துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்பார்” என்றார்.
Related Tags :
Next Story