பசு கடத்தியதாக சந்தேகம்: 2 பேரை கடத்தி காரில் உயிருடன் எரித்துக்கொன்ற பசு பாதுகாவலர்கள் கும்பல்? - கொடூர சம்பவம்


பசு கடத்தியதாக சந்தேகம்: 2 பேரை கடத்தி காரில் உயிருடன் எரித்துக்கொன்ற பசு பாதுகாவலர்கள் கும்பல்? - கொடூர சம்பவம்
x

பசு கடத்தியதாக 2 பேரை பசு பாதுகாவர்கள் கும்பல் தாக்கியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஹட்மிகா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜுனைத் (வயது 39), நசீர் (வயது 25). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 பேரும் கடந்த புதன்கிழமை அதிகாலை தங்கள் பொலிரோ காரில் ராஜஸ்தான்-அரியானா எல்லை கிராமத்தில் உள்ள ஜுனைத்தின் உறவினரை சந்திக்க சென்றுள்ளனர்.

அப்போது, அரியானாவை சேர்ந்த பசு பாதுகாப்பு கும்பல் ஜுனைத்தும், நசீரும் காரில் பசு மாட்டை கடத்தியதாக கருதி அவர்களை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். அரியானாவின் பெரோஷ்பூர் ஹிர்கா பகுதியை சேர்ந்த ரின்கு சைனி என்ற டாக்சி டிரைவர் முதலில் ஜுனைத், நசீர் பயணித்த காரை பின் தொடர்ந்துள்ளார். பசு பாதுகாவலர்கள் அமைப்பை சேர்ந்த இவர் பின்னர் பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த மொனு மனீசர் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் தங்கள் குழுவினருடன் இணைந்து ஜூனைத், நசீரின் காரை இடைமறித்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர், ஜூனைத் மற்றும் நசீரை காருடன் கடத்தி சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டுபேரையும் உயிருடன் காருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

அரியானாவின் பர்வாஸ் கிராமத்தில் காட்டுப்பகுதியில் கார் தீக்கிரையான நிலையிலும், அதனுள் 2 பேர் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடப்பது குறித்தும் போலீசாருக்கு வியாழக்கிழமை தகவல் கொடுக்கபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், 2 பேரை உயிருடன் எரித்து கொன்றதில் தொடர்புடையதாக டாக்சி டிரைவர் ரிங்கு சைனியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த அனில், ஸ்ரீகாந்த், ரிங்கு சைனி, லோகேஷ் சிங்லா, மோனு ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபராக மோனுவையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் ரிங்கு சைனியிடம் ராஜஸ்தான் போலீஸ் திடுக்கிடம் தகவல் வெளியாகியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விவரம்:-

அரியானாவின் நுங்க் பகுதியில் பசு கடத்தலில் ஈடுபட்டதாக ஜூனைத் மற்றும் நசீரை தாக்கிய 4 பேர் கொண்ட பசு பாதுகாப்பு கும்பல் தாக்குதலுக்கு உள்ளான 2 பேரையும் படுகாயங்களுடன் அரியானாவின் பெரோஸ்பூர் ஹிர்கா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

2 பேர் மீதும் பசு கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி போலீசிடம் கூறிய நிலையில் 2 பேரும் படுகாயங்களுடன் இருந்ததை பார்த்த போலீசார் இருவரையும் விசாரிக்காமல் அந்த கும்பலிடமே இவர்களை அழைத்து செல்லும்படி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயங்களால் 2 பேரும் மயக்கமடைந்ததால் அதிர்ச்சியடைந்த பசு பாதுகாவலர்கள் கும்பல் இருவரையும் அவர்களின் காரிலேயே அங்கிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் பர்வாஸ் கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு காருக்குள் இருவரையும் போட்டுவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காரின் எண்ணை வைத்து ஜூனைத், நசீர் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான், அரியானா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள், பல்வேறு தகவல்கள் அடுக்கடுக்காக வந்துகொண்டிருக்கும் நிலையில் போலீசாரின் விசாரணையிலேயே சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story