ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில் தேர்திருவிழா


ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில் தேர்திருவிழா
x
தினத்தந்தி 5 May 2022 8:41 AM GMT (Updated: 5 May 2022 8:41 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில் தேர்திருவிழா நடைபெற்று வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் மற்றும் ராமானுஜர் கோவில் உள்ளது. வைணவ சமயத்தை தோற்றுவித்தும் மதங்களில் புரட்சி செய்த மகான் ஸ்ரீமத் ராமானுஜர் இங்கு அவதரித்ததாக நம்பப்படுகிறது. இதனால் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும், ராமானுஜருக்கு அவதார விழா என 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும். இந்தநிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி ஆதிகேசவ பெருமாளுக்கு கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாள் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து கடந்த 25-ந் தேதி துவங்கி ராமானுஜருக்கு 10 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில், தங்க பல்லக்கு, யாழி வாகனம், சிம்ம வாகனம், அம்ச வாகனம், குதிரைவாகனம், சூரிய பிரபை வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த நிலையில் நேற்று திருதேர் பவனி நடைபெற்றது. அப்போது, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் கோஷம் எழுப்பினர். இந்த தேர்திருவிழாவுக்கு வெளி மாவட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்தனர். விழாவையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கபட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story