கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி


கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
x
தினத்தந்தி 4 July 2021 5:43 PM GMT (Updated: 4 July 2021 5:43 PM GMT)

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவில்களில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பொள்ளாச்சி

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால்  கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவில்களில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

தரிசனத்துக்கு அனுமதி 

கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. இதை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதன் காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

சுத்தம் செய்யும் பணி 

இதனால் பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளான ஆனைமலை , சுல்தான்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இருக்கும் கோவில்கள் உள்பட அனைத்து கோவில் களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக அனைத்து கோவில்களையும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

பக்தர்கள் கூட்டமாக நிற்கும் பகுதியில் உள்ள இரும்பினால் அமைக்கப்பட்டு இருக்கும் தடுப்புகள், கோவில் வளாகத்தில் உள்ள தடுப்புகள் உள்பட அனைத்தையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. 

பல்வேறு கட்டுப்பாடுகள் 

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


Next Story