தென்காசியில் பரவலாக மழை; குண்டாறு அணை நிரம்பி வழிகிறது


தென்காசியில் பரவலாக மழை; குண்டாறு அணை நிரம்பி வழிகிறது
x
தினத்தந்தி 5 Jun 2021 7:52 PM GMT (Updated: 5 Jun 2021 7:52 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக கடந்த 1-ந் தேதி 102 டிகிரி பதிவானது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் நெல்லை மாநகரில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லையில் 30 மில்லி மீட்டர் மழையும், பாளையங்கோட்டையில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. இந்த மழையால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றும், நேற்று முன்தினமும் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 134.90 அடியாக இருந்தது. அணைக்கு 1,067.13 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,292.25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.30 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 185 கனஅடி தண்ணீர் வருகிறது. 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 40.65 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.43 அடியாகவும், கொடுமுடியாறு அணை 28 அடியாகவும், கடனா 74 அடியாகவும், ராமநதி 63 அடியாகவும், கருப்பாநதி 59 அடியாகவும், அடவிநயினார் 83.75 அடியாகவும் உள்ளது. செங்கோட்டை, புளியரை பகுதியில் பெய்த மழை காரணமாக, 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடுகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- பாபநாசம்-3, சேர்வலாறு-2, மூைலக்கரைப்பட்டி-65, பாளையங்கோட்டை-18, நெல்லை-30, கருப்பாநதி-10, குண்டாறு-3, சங்கரன்கோவில்-3, சிவகிரி-2.

Next Story