விவசாயிக்கு கொலை மிரட்டல்


விவசாயிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 17 Dec 2019 10:15 PM GMT (Updated: 17 Dec 2019 7:50 PM GMT)

மூன்றடைப்பு அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

வள்ளியூர், 

மூன்றடைப்பு அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 43). விவசாயி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கும் இடையே சீட்டுப்பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜகோபால் வீட்டுக்கு சென்று தனக்கு தரவேண்டிய சீட்டுப்பணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் முருகன் தனது தந்தை செல்வராஜூடன் விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர். அப்போது தோட்டத்தில் உள்ள தண்ணீர் குழாய்களையும், சொட்டுநீர் பாசன குழாய்களையும் ராஜகோபால் அரிவாள் கொண்டு வெட்டி சேதப்படுத்தி கொண்டிருந்ததை பார்த்து முருகன் சத்தம் போட்டு தடுத்துள்ளார். உடனே ராஜகோபால் தனது கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி, எப்படி என் வீட்டுக்கு வந்து சீட்டுப்பணம் கேட்கலாம். இனிமேல் வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை தேடி வருகின்றனர்.

Next Story