திசையன்விளையில் டிராக்டர்- மொபட் மோதல்; வியாபாரி பரிதாப சாவு


திசையன்விளையில் டிராக்டர்- மொபட் மோதல்; வியாபாரி பரிதாப சாவு
x
தினத்தந்தி 17 Dec 2019 10:45 PM GMT (Updated: 17 Dec 2019 7:50 PM GMT)

திசையன்விளையில் நேற்று டிராக்டரும், மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில், புளி வியாபாரி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

திசையன்விளை, 

நெல்லை மாவட்டம் திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் கோபால். அவருடைய மகன் வினோத் ராஜா (வயது 37). புளி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று மதியம் தனது மொபட்டில் திசையன்விளை- உடன்குடி ரோட்டில் உள்ள பெந்தய கோஸ்தே சபை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக உரம் ஏற்றி வந்த டிராக்டர், அவர் மீது மோதியது. இதில் வினோத் ராஜா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து டிராக்டர் டிரைவர், டிராக்டரை நிறுத்தி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வினோத் ராஜாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story