நண்பர்களுடன் விளையாடியபோது பரிதாபம்: ஓடையில் மூழ்கி கொத்தனார் சாவு


நண்பர்களுடன் விளையாடியபோது பரிதாபம்: ஓடையில் மூழ்கி கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 25 Nov 2019 10:00 PM GMT (Updated: 25 Nov 2019 8:11 PM GMT)

நாங்குநேரி அருகே ஓடையில் மூழ்கி கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் வேம்பு. இவரது மகன் ஆழ்வார் (வயது 24). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஆழ்வார் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள ஓடையில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது ஓடையில் உள்ள பாலத்தின் கீழே தண்ணீருக்குள் மூழ்கி சென்று வெளியே வரவேண்டும் என்று நண்பர்களுக்கு இடையே போட்டி வைத்து விளையாடினர். அதன்படி அனைவரும் பாலத்தின் கீழே மூழ்கி சென்றுள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் ஆழ்வார் மட்டும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பாலத்தின் கீழே தண்ணீருக்குள் மூழ்கி சென்று பார்த்தனர். அப்போது ஆழ்வார் பாறைகளுக்கு இடையே சிக்கி தண்ணீரில் மூழ்கி கிடந்தார்.

அவரை அவர்கள் மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆழ்வாரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story