குற்றாலம் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


குற்றாலம் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 24 Nov 2019 9:30 PM GMT (Updated: 24 Nov 2019 8:11 PM GMT)

குற்றாலம் அருகே காதல் திருமணம் செய்த கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் இசக்கிராஜ். மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி ஸ்ரீனிவாசுகி(வயது26). 2 பேரும் கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இசக்கிராஜூக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீனிவாசுகிக்கு தெரியவந்தது. உடனே அவர் இதுகுறித்து இசச்கிராஜிடம் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையிலும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இசக்கிராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த ஸ்ரீனிவாசுகி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு ஸ்ரீனிவாசுகி தீயில் கருகி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஸ்ரீனிவாசுகிக்கு திருமணம் முடிந்து 4½ ஆண்டுகள் ஆவதால் இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story