தென்காசி மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்படும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


தென்காசி மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்படும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 22 Nov 2019 11:00 PM GMT (Updated: 22 Nov 2019 8:14 PM GMT)

தென்காசி மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தென்காசி,

தென்காசி மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கி மகாலில் நேற்று நடந்தது. விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

குளிர்மனமும் நல்ல குணமும் கொண்ட மக்கள் நிறைந்து வாழும் தென்காசியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அழகிய மனம் கொண்ட மலைகளை கடந்து, தடைகளை கடந்து, மூலிகை வளத்தை தன்னுடன் சுமந்து ஓடி வந்து விழுகின்ற அருவிகளையும், அருள்மழை பொழியும் ஆண்டவனையும், பசுமை போர்த்திய வயல்வெளிகளையும் உள்ளடக்கி தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் துடிப்புடன் செயல்பட கூடிய உயிரோட்டம் உள்ள அறிவுசார் சமூகமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். வருவாய்த்துறையின் சேவையை காலதாமதம் இன்றி மக்களை அடைய செய்யும் வகையில் புதிய மாவட்டங்கள், கோட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. ஒரு மாவட்டத்தின் நிர்வாக தலைமை மையமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் விளங்குகிறது. மாவட்டத்தின் ஒருமுனையில் இருந்து மக்கள் அதிக தூரம் சென்று துன்பப்படக்கூடாது என்பதற்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், கடலூர், கரூர், பெரம்பலூர், கிரு‌‌ஷ்ணகிரி ஆகிய புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டன. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வகுத்து வந்த பாதையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அந்த வகையில் தற்போது தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் மாவட்டமாக தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 32 மாவட்டங்கள் உள்ளன. 33-வது மாவட்டமாக தென்காசி உருவாக்கப்பட்டு உள்ளது. அறிவிப்பை அறிவிப்பாக விட்டுவிடாமல் அதை செயல்படுத்துகின்ற அரசு தான் அ.தி.மு.க. அரசு.

நீர் வளமும், நிலவளமும் பின்னிப்பிணைந்து இயற்கை சூழல் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தென்காசி தலைமையிடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டம் இயற்கை தாயின் செல்லப்பிள்ளை. இந்த மாவட்டத்தின் வளர்ச்சி பணிக்கு தேவையான அனைத்து புதிய திட்டங்களும் தொடங்கப்படும். அந்த திட்டங்களை இந்த மாவட்டம் செயல்படுத்தி முதன்மை மாவட்டமாக வரும் என்பது சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story